படம் | ராகுல் மாங் கூட்டத்தில் இன்ஸ்டா பதிவு
இந்தியா

நடிகை புகார் எதிரொலி: கேரள காங். எம்எல்ஏ கட்சிப் பதவியிலிருந்து ராஜிநாமா

தன்னை ஹோட்டலுக்கு வருமாறு அழைத்ததாகவும் நடிகை ரினி ஆன் ஜார்ஜ் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் எம்எல்ஏயும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங் கூட்டத்தில் தனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவர் தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தார்.

கேரளத்தில் ஓர் இளம் அரசியல் தலைவர் தனக்கு ஆட்சேபகரமான (ஆபாச) குறுஞ்செய்திளை அனுப்பியதாகவும் தன்னை ஹோட்டலுக்கு வருமாறு அழைத்ததாகவும் நடிகை ரினி ஆன் ஜார்ஜ் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். அவரை எச்சரித்தபோதிலும் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தனது செயலை அவர் நிறுத்தாவிடில் அவருடைய பெயரை வெளியிடுவேன் என்றும் ரினி ஆன் ஜார்ஜ் கூறினார்.

இந்நிலையில், பாலக்காடு தொகுதி எம்எல்ஏவும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்தில் பெயரைக் குறிப்பிட்டு, தனக்கும் அவர் இதுபோன்ற தொல்லை அளித்ததாக பெண்ணிய எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜகவும், கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டிஒய்எஃப்ஐ}யும் போராட்டங்களை நடத்தின. குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராகுல் மாங்கூட்டத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.

மாநில அரசியலில் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளானது. இதையடுத்து, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக ராகுல் மாங்கூட்டத்தில் வியாழக்கிழமை அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுடன் பேசினேன். அவர்கள் எனது ராஜிநாமாவைக் கோரவில்லை. எனினும் அற்ப விவகாரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது என்பதற்காக எனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். புகார் கூறியுள்ள நடிகை எனது நண்பர். அவர் குற்றம்சாட்டியுள்ள நபர் நான் அல்ல. நான் சட்டத்துக்கோ அரசியல் சாசனத்துக்கோ எதிராக நடந்து கொள்ளவில்லை' என்றார்.

இந்த விவகாரம் குறித்து கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:

தீவிரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை காங்கிரஸ் கட்சி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரம் தற்போதுதான் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிராக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவது வழக்கம். உரிய வகையில் புகார் பதிவு செய்யப்படும்போதுதான் கட்சி நடவடிக்கை எடுக்கும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது உட்கட்சி ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

SCROLL FOR NEXT