உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சுட்டுப் பிடித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள கசானா பகுதியில் ரூ. 36 லட்சம் வரதட்சிணை கேட்டு மனைவி நிக்கியை கொடூரமாக தீயிட்டு எரித்து கொலை செய்துள்ளார் கணவர் விபின் பாடி. இது தொடர்பாக பகிரப்பட்டு வரும் விடியோவில் தாயுடன் சேர்ந்து மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து கடுமையாகத் தாக்கியுள்ளார் விபின்.
பின்னர், ஆசிட் போன்ற எளிதில் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார். தீக்காயங்களுடன் படிக்கட்டு அருகே அப்பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மற்றொரு விடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விடியோவை நிக்கியின் சகோதரி பதிவு செய்துள்ளார். நிக்கி - விபின் திருமணம் 2016ஆம் ஆண்டு நடந்த நிலையில், அதே நாளில் விபினின் மற்றொரு சகோதரர் ரோஹித்துக்கும் நிக்கியின் சகோதரி காஞ்சனுக்கும் திருமணம் நடந்துள்ளது.
சகோதரிகள் இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில், நிக்கியிடம் ரூ.36 லட்சம் கேட்டு கணவரும் மாமியாரும் இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
வரதட்சிணைக் கேட்டு மாமியார் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நெருக்கடி கொடுப்பார்கள் என இறந்த நிக்கியின் சகோதரி காஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஆக. 21 ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து, காஞ்சன் அளித்த புகாரின்பேரிலேயே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவர் விபினை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, எளிதில் தீப்பற்றக் கூடிய திரவத்தை வாங்கிய பகுதிக்கு காவல் துறையினர் விபனை இன்று அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கிக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். காவல் துறையினர் எச்சரித்தும் தப்பியோட முயன்றதால், விபினை காலுக்கு கீழே சுட்டுப் பிடித்தனர்.
பின்னர், மருத்துவமனையில் காவல் துறையினர் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விபின், தனது மனைவியை தான் கொல்லவில்லை என்றும், அவரே தீயிட்டு எரித்துக்கொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கணவன் - மனைவி இடையே சண்டை வருவது இயல்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகனின் கண் முன் நடந்த கொடூரம்
சம்பவம் நடந்த இடத்தில் விபின் - நிக்கி தம்பதியின் 6 வயது மகன் இருந்துள்ளார். அவரின் கண் முன்பே இந்தக் கொடூரம் நடந்துள்ளது.
அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அச்சிறுவன், அவர்கள் என் தாய் மீது எதையோ ஊற்றினார்கள். பின்னர் என் தந்தை அவரை கன்னத்தில் அறைந்து, லைட்டர் கொண்டு தீயிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய நிக்கியின் தந்தை, முதலில் அவர்கள் ஸ்கார்ப்பியோ கார் கேட்டனர். அதனைக் கொடுத்தோம். பின்னர், புல்லட் பைக் கேட்டனர். அதனையும் கொடுத்தோம். ஆனால், தொடர்ந்து வரதட்சிணைக் கேட்டு என் மகளை அவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
வலியை அனுபவித்து என் மகளின் உயிர் பிரிந்துள்ளது. அவர்கள் என் இளைய மகளைக் கொன்றுள்ளனர். இக்கொடுமைக்கு காரணமானவர்களை அரசு தண்டிக்க வேண்டும். அவர்களின் வீட்டை அரசு தரைமட்டமாக்க வேண்டும். இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.