தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு! 8 ஆண்டுகளுக்குப் பின்
தில்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. டிக்கெட் விலையை ரூ.1 முதல் ரூ.4 வரை உயர்த்தியிருக்கிறது தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம்.
விமான விரைவுப் பாதையில் மட்டும், ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வையடுத்து, தில்லியில் இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.11 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.64 ஆகவும் இருக்கும். சுமார் லட்சக்கணக்கான பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வின் தாக்கம் இருக்கும்.
கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 8 ஆண்டுகளுக்குப் பின், தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்திருக்கிறது.
மிகக் குறைந்த அளவிலேயே கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அனைத்து டிக்கெட்டுகளும் ரூ.1 முதல் ரூ.4 வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தில்லி மெட்ரோ கட்டணம் உயர்த்தப்படுகிறது. அது ஆகஸ்ட் 25 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது என்று பதிவிட்டுள்ளது.
விமான நிலைய வழித்தடத்தில் மட்டும் ரூ.5 வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.