பிப். 9 முதல் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு! சென்னையில் அல்ல பெங்களூரில்!!
பெங்களூர் மெட்ரோ கட்டண உயர்வு பற்றி..
மெட்ரோ ரயில் சேவைக்கான வருடாந்திர தானியங்கி கட்டணத் திருத்தத்தைப் பெங்களூர் மெட்ரோ ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த விலையுயர்வு பிப்ரவரி 9 முதல் அமலுக்கு வருகின்றது.
மெட்ரோ கட்டண உயர்வு தூரத்தைப் பொருத்து ரூ. 1 முதல் ரூ. 5 வரை, அதாவது 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 2002 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில்வே (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதல் கட்டண நிர்ணயக் குழுவின்(எஃப்எஃப்சி) பரிந்துரையின்படி இது செயல்படுத்தப்படுவதாக பெங்களூர் மெட்ரோ ரயில் கார்போரேஷன் லிமிடெட்(பிஎம்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெங்களூர் மெட்ரோ கார்போரேஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
திருத்தப்பட்ட கட்டண அமைப்பைப் பரிந்துரைத்தபோது, ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை மாற்றி அமைத்ததாலும், கட்டண மண்டலங்களை 29-லிருந்து 10 ஆகக் குறைத்ததாலும், சராசரியாக 51.55 சதவீத கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று திடீர் உயர்வுகளைத் தவிர்ப்பதற்குப் பராமரிப்புச் செலவுடன், ஆண்டுதோறும் கட்டணத்தைத் திருத்தியமைக்க அக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, பரிந்துரைகளுக்கு இணங்க, வருடாந்திர மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணத் திருத்தம் 2026 பிப்ரவரி 9 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் பயணிகளுக்கான சலுகைகள் தொடரும், அதன்படி ஸ்மார்ட் கார்டு/என்சிஎம்சி பயனர்களுக்குத் தள்ளுபடி உண்டு. அதாவது கூட்டம் அதிகமுள்ள பணி நேரங்களில் 5 சதவீத தள்ளுபடியும், அலுவலக நேரங்கள் கூட்டமில்லாத நேரங்களில் 10 சதவீத தள்ளுபடியும், ஞாயிறு மற்றும் மூன்று தேசிய விடுமுறை நாள்களில் 10 சதவீத தள்ளுபடியும் தொடரும் என்று மெட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. சுற்றுலா அட்டைகள்/குழு டிக்கெட்டுகளுக்கு 5 சதவீத கட்டண உயர்வு பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில், திடீர் கட்டண உயர்வுகளைத் தவிர்ப்பதோடு, நிதிநிலைத் தன்மை மற்றும் சேவை நம்பகத்தன்மையை உறுதி செய்வதே வருடாந்திர கட்டணத் திருத்தத்தின் நோக்கம் என்று பெங்களூர் மெட்ரோ ரயில்வே வாரியம் தெரிவித்தது.