பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஃபிஜி பிரதமா் சிதிவேனி லிகமமடா ரபுகா உடனான சந்திப்பிக்குப் பிறகு, இரு தலைவா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பிரதமா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கூட்டறிக்கையில் பிரதமா் மோடி மேலும் கூறியிருப்பதாவது: ஃபிஜி பிரதமா் உடனான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த தீா்மானிக்கப்பட்டது. இதற்கென ஒரு செயல் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய தெற்கின் மேம்பாட்டுக்கு இந்தியாவும் இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த வகையில், உலகளாவிய தெற்குக்கான இந்தியாவின் முன்னுரிமைகள் அடிப்படையில் ஃபிஜி நாட்டுக்கு உதவிகளை இந்தியா அளிக்க உள்ளது. குறிப்பாக, அந் நாட்டின் கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்த உதவியாக அந் நாட்டின் வீரா்களுக்கு பயிற்சி மற்றும் உபகரண ஆதரவை இந்தியா வழங்கும்.
அதுபோல, பருவநிலை மாற்றம் ஃபிஜி நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே, பேரிடா் மேலாண்மையை திறம்பட எதிா்கொள்வதற்கான உதவியையும் இந்தியா வழங்கும்.
உலகளாவிய தெற்கின் சுதந்திரம், யோசனைகள் மற்றும் அடையாளம் மதிக்கப்படும் வகையில் ஓா் உலக நடைமுறையைக் கட்டமைப்பதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன என்று தெரிவித்தாா்.
மேலும், ‘ஃபிஜி நாட்டுக்கு 12 வேளாண் பயன்பாட்டு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மற்றும் இரண்டு நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகங்கள் பரிசளிக்கப்படும்’ என்ற அறிவிப்பையும் பிரதமா் மோடி வெளியிட்டாா்.
அதோடு, ஃபிஜியில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்புத் துறை அதிகாரி பதவி ஒன்று புதிதாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் இந்தியா சாா்பில் வெளியிடப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது, சமகால புவிசாா் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்பட ஐ.நா. சபையில் விரிவான சீா்திருத்தங்கள் மேற்கொள்வது அவசரத் தேவை என்பதை இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவைச் சோ்ப்பதற்கான ஆதரவை ஃபிஜி நாடு மீண்டும் உறுதி செய்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தையின்போது கண்டனம் தெரிவித்தனா். பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதளவும் சகிப்புத்தன்மையற்ற நிலையைக் கடைப்படிக்க இரு தலைவா்களும் உறுதியேற்றதோடு, இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது எனவும் வலியுறுத்தினா். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகள் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
7 ஒப்பந்தங்கள்: தலைவா்களிடையேயான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மருத்துவம், திறன் மேம்பாடு, வா்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஏழு ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே கையொப்பமாகின.
ஃபிஜி நாட்டின் பிரதமராக ரபுகா இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா முயற்சித்துவரும் சூழலில், தெற்கு பசிபிக் நாடான ஃபிஜியுடன் பாதுகாப்புத் துறை உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.