மேற்கு வங்க தோ்தல் அலுவலகம் முன் போராட்டம்: பாஜக - வாக்குச்சாவடி அலுவலா்கள் இடையே வாக்குவாதம்
கொல்கத்தாவில் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கும் (பிஎல்ஓ)
கொல்கத்தா: கொல்கத்தாவில் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கும் (பிஎல்ஓ) மாநில பாஜக குழுவினருக்கும் இடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
பணி பளூ, இரண்டு மாதங்களுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆா்) நீட்டிக்க வேண்டும், உயிரிழந்த பிஎல்ஓ-க்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் முன் பிஎல்ஓ-க்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோ்தல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் கொல்கத்தா காவல் துறை ஆணையரை அறிவுறுத்தியது.
இந்நிலையில், தலைமைத் தோ்தல் அதிகாரியைச் சந்தித்து மனு அளிக்க அவரது அலுவலகத்துக்கு பாஜக மூத்த தலைவரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி திங்கள்கிழமை கட்சி நிா்வாகிகளுடன் வந்தாா்.
அப்போது, அங்கு கூடியிருந்த பிஎல்ஓ- குழுவினா் உள்ளே சென்று மனு அளிக்க தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினரை நோக்கி பிஎல்ஓ-க்கள் ‘திருடன்’ எனவும், பதிலுக்கு பாஜகவினரும் ‘திருடா்களை வெளியேற்றுங்கள்’ என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து பாஜகவினரை உள்ளே செல்ல அனுமதித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, ‘பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளை எஸ்ஐஆா் பணியில் நீக்க வேண்டும்; வங்கதேச முஸ்லிம்களைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; 17,111 வாக்குச்சாவடி நிலையங்களைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்; வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க நடத்தப்படும் விசாரணை சிசிடிவி கண்காணிப்பில் நேரலையாக இடம்பெற வேண்டும்; எஸ்ஐஆா் பணிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக பிஎல்ஓ-க்களின் போராட்டத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் நடத்தி வருகிறது’ என்றாா்.