தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு! 4 பேருக்கு என்ஐஏ காவல் நீட்டிப்பு!!
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு என்ஐஏ காவல் நீட்டிப்பு
புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரின் தேசிய புலனாய்வு விசாரணைக் காவல் மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய 10 நாள்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக் காவல் நிறைவு பெற்ற நிலையில், தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட டாக்டர் முஸாம்மில், டாக்டர் அதீல், டாக்டர் ஷாஹீன், மற்றும் மௌல்வி இர்ஃபான் அகமது ஆகியோர், இன்று முதன்மை அமர்வில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க ஊடகத் துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பாட்டியாலா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், மருத்துவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்ட உமர் உன் நபி-உடன் தொடர்பிலிருந்தவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்கள், உதவியவர்கள் என பல தரப்பிலும் சோதனைகள் நடத்தப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி, தில்லி செங்கோட்டை அருகே, வெடிபொருள்களுடன் வந்த ஐ20 காரை ஓட்டி வந்த டாக்டர் உமர்-உன்-நபி, காரை வெடிக்க வைத்த சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்.