ஆந்திரத்தில் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திரம் மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் தனியார் பேருந்து ஒன்றில் பத்ராசலம் ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் முடிந்து இன்று அதிகாலை அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
"இந்த விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.