ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு!
அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளதைப் பற்றி...
ஜெர்மனியில் ராகுல்: அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்ளிட்டவைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவந்த நிலையில், கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை பாஜகவினர் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி பெர்லின் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாடினார். மேலும், அதைத் தொடர்ந்து கடந்த வாரம் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றிய விடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
அந்த விடியோ ராகுல் காந்தி பேசும்போது, “அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, புலனாய்வுத் துறை ஆகியவற்றை ஆளும் பாஜக அரசு ஒரு ஆயுதம் போல பயன்படுத்தி வருகிறது.
நமது அரசு துறைகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக மீது அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை இரண்டும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஒரு தொழிலதிபர் காங்கிரஸை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சிதான் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற துறைகளை உருவாக்கப் பாடுபட்டது. அவற்றை ஒருபோதும் சொந்த துறைகளாகப் பார்க்கவில்லை.
ஆனால், பாஜக இதை இப்படிப் பார்க்கவில்லை. அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அரசியல் அதிகாரத்தைக் கட்டியெழுப்ப அமலாக்கத்துறையையும், சிபிஐயும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.
ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் பாஜகவை எதிர்த்துப் போராடவில்லை. இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற துறைகளை காப்பற்றுவதற்காகவே போராடுகிறோம்” எனத் தெரிவித்தார்.