வங்கதேச பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு: வடகிழக்கில் 11 பேர் கைது!
வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக அஸ்ஸாம், திரிபுராவில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக அஸ்ஸாம், திரிபுராவில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த அடிப்படைவாத குழுக்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாகவும், மத்திய புலன் விசாரணைக் குழு அளித்த தகவலின்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய குவாஹாத்தி காவல் துறை ஆணையர் பார்த்தசாரதி, திரிபுரா மாணவர் மீதான இனவெறித் தாக்குதல் விவகாரத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் பார்பேட்டா, சிராங், பக்சா, தர்ராங் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
இவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள். அவர்கள் கொடுக்கும் பணிகளை கட்டளையாக ஏற்று செய்து முடிப்பவர்கள். அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களின் அமைதியை சீர்குலைப்பதே இவர்களின் நோக்கம்.
வடகிழக்கை குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தை இந்திய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புலனாய்வு அமைப்பு கொடுத்த தகவலின்படியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த நபர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட அமைப்பான, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷி, இமாம் மஹ்முதர் கஃபிலா ஆகிய அமைப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இவர்களில் இந்திய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் மற்றும் முன்பு வங்கதேசத்துக்குச் சென்று வந்தவர்கள், அத்துடன் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் அறியப்பட்ட முன்னாள் உறுப்பினர்களும் அடங்குவர் எனக் குறிப்பிட்டார்.