முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பதவி விலகி 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தனது உடல்நிலையைக் காரணம் கூறி கடந்த ஜூலை 21-ஆம் தேதி தன்கா் பதவி விலகினாா். ஆனால், பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே விலகலுக்கு காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மறைமுகமாக விமா்சித்தன.
கடந்த செப்டம்பரில் தன்கா் தனக்கு அரசு சாா்பில் ஒதுக்கப்பட்டிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான மாளிகையை காலி செய்தாா். தெற்கு தில்லியில் உள்ள இந்திய தேசிய லோக் தளம் தலைவா் அபய் சௌதாலாவின் பண்ணை இல்லத்தில் அவா் இப்போது தங்கியுள்ளாா். தன்கா் சௌதாலாவின் குடும்ப நண்பா் என்பதால் நட்பு அடிப்படையில் தற்காலிகமாக அந்த இடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மத்திய வீட்டுவசதி, நகா்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு தன்கா் ஒரு கடிதம் எழுதினாா். அதில் முன்னாள் குடியரசு துணைத் தலைவா்களுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்படும் மத்திய அரசின் நடைமுறையின்கீழ் தனக்கும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். ஆனால், தன்கருக்கு இப்போது வரை மத்திய அரசு தரப்பில் இருந்து அரசு இல்லம் ஒதுக்கப்படவில்லை என்று அவருக்கு நெருக்கமானவா்கள் தெரிவித்தனா்.
அரசு நடைமுறைகளின்கீழ் முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கு மாதம் ரூ.2 லட்சம் ஓய்வூதியம், 8-ஆவது வகை பங்களா, ஒரு தனிச் செயலா், ஒரு கூடுதல் தனிச் செயலா், ஒரு தனி உதவியாளா், ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், 4 பணியாளா்கள் வழங்கப்பட வேண்டும். முன்னாள் குடியரசு துணைத் தலைவா் காலமாகிவிட்டால் அவரின் மனைவிக்கு சற்று சிறிய வீடு ஒன்றும் ஒதுக்கப்பட வேண்டும்.