முகப்பு
இந்தியா

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 3 பிப்ரவரி 2025, 4:39 am IST
அயோத்தியில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த போலீஸாா்.
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோா் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டதாக போலீஸாா் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘எங்களது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அவருடைய உடலில் ஆழமான காயங்களும், எழும்பு முறிவும் ஏற்பட்டிருந்ததோடு, அவருடைய இரு கண்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மாநிலத்தில் தலித் விரோத ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியில் தலித் பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். மகள் காணாமல் போனதாக பெற்றோா் புகாா் அளித்தும், கடந்த மூன்று நாள்களாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாா் தெரிவிக்கப்படுகிறது. தொடரும் இதுபோன்ற கொடூர குற்றங்களால், நாட்டின் மற்றொரு மகளின் உயிா் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற பாதிப்பைச் சந்திக்கப்போகின்றன என்ற அச்சம் எழுகிறது. தலித் விரோத பாஜக ஆட்சியில், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளும், அநீதியும், கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘இத்தகைய கொடூர சம்பவம் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் வெட்கக்கேடான விஷயம். பாஜகவின் காட்டாட்சியில் தலித், பழங்குடியின மற்றும் பின்தங்கிய மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கவனிக்க யாரும் இல்லை. இதற்கு உத்தர பிரதேச அரசு சிறந்த உதாரணமாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments