நாட்டில் புரளிகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புரளி வந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் வந்த புரளிதான் ரூ. 2000 தாள்களைத் தொடர்ந்து ரூ. 200 தாள்களும் திரும்பப்பெறப்படும் என்பது.
அதாவது, புழக்கத்தில் இருக்கும் ரூ. 200 தாள்களை ஆர்பிஐ மெல்ல குறைத்து வருவதாகவும், விரைவில் திரும்பப் பெறப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் இந்த தகவல் கூறுகிறது.
ஆனால், ஆர்பிஐ சொல்லியிருக்கும் தகவலோ வேறு. தற்போதைக்கு 200 ரூபாய் தாள்களை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை. தற்போது ஏராளமான ரூ. 500 மற்றும் ரூ. 200 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. எனவே, மக்கள்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களிடம் 200 ரூபாய் தாள்கள் இருந்தால் அவை உண்மையானவையா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும், யாராவது பணம் கொடுத்தால் அது உண்மையான தாள்களா என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குமாறும், மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதும் அதனை உறுதி செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், ரூ. 200 தாள்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்வதற்கான வழிகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ரூ. 200 தாள்களில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இருக்கும். நுண் எழுத்துகளில் ஆர்பிஐ, பாரத், இந்தியா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ரூ. 200 என்றும் மிகச் சிறிதாக எழுதப்பட்டிருக்கும். வலதுபுறத்தில் அசோகர் தூண் இருக்கும். எனவே, இவற்றையெல்லாம் கவனித்து ரூபாய்த் தாள்களை வாங்குவதையும் மற்றவர்களுக்குக் கொடுப்பதையும் உறுதி செய்துகொள்ளுமாறு மக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.