அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திரும்பப் பெற தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்காவின் நாடு கடத்தல் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
“மனித கடத்தல் என்பது அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பலரை ஏமாற்றி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அழைத்து வருகிறார்கள்.
சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலரும் பெரும் கனவுடன் வருகிறார்கள். இவர்கள் ஏமாற்றப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் கடந்த வாரம் நாடு கடத்தினர். அவர்களின் கைகளும், கால்களும் கட்டப்பட்டு அவமதிப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இது சட்டப்படி செய்யப்பட்ட வழக்கமான நடவடிக்கைதான் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க பயணத்தின்போது இந்தியர்களை கண்ணியமாக நாடு கடத்த பிரதமர் மோடி வலியுறுத்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.