முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்திலும் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

Updated On : 22 பிப்ரவரி, 2025 at 7:39 AM
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறையின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ``இந்தியாவின் பொருளாதார உயர்வு என்பது மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவதால் கிடைப்பது. முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒருவருக்கொருவர் போட்டியிடும் அதே நேரத்தில், மத்திய அரசுடன் மாநிலங்கள் ஒத்துழைப்பது ஒரு வெற்றிகரமான பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கும்.

மாநிலங்கள் வளர்ச்சியடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சியடையும். இன்று, உலகின் வளர்ச்சியில் 16 சதவிகிதம் இந்தியாவிலிருந்து வருகிறது. உலகுக்கு வளர்ச்சி அளிப்பதில் நாம் முன்னணியில் இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளில், உலகின் 11 ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 5 ஆவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி, சுற்றுலா, உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிக்க கேரளம் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மத்திய அரசின் உறுதியாக இருக்கிறது.

இந்தியா, தொடர்ந்து உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், அதன் பொருளாதார செல்வாக்கையும் விரிவுபடுத்துகிறது. உலகின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் இந்தியா இன்னும் பெரிய பங்கை வகிக்கும்’’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கேரளத்தில் பாஜக வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு, ``கேரளத்தில் தாமரை மலரும்; கேரள மக்களின் அன்பையும் பாசத்தையும் தாமரை பெறும். மூன்றாவது முறையாக மத்திய அரசில் பாஜக வெற்றி பெற்றதைப் போலவே, பெரும் பெரும்பான்மையைப் பெற விரும்புகிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார், மூன்று மடங்கு கடினமாக உழைக்கிறார், மூன்று மடங்கு சிறப்பாக உழைக்கிறார். கேரள மக்களும் எங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.