முகப்பு
இந்தியா

மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சரின் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு.

Updated On : 25 பிப்ரவரி, 2025 at 8:37 AM
மாணிக்ராவ் கோகடே
பகிர்:

மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சருக்கு ஜாமீன் வழங்கி சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு, முதலமைச்சரின் 10% ஒதுக்கீட்டின் கீழ், யோலாகர் மாலா பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு (எல்ஐஜி) இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது.

அதற்கு தகுதி பெற தங்களை எல்ஐஜி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் நகரத்தில் சொந்தமாக வீடு இல்லை என்றும் கோகடே சகோதரர்கள் மோசடி செய்து குடியிருப்பைப் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, அவரது சகோதரர் சுனில் கோகடே ஆகியோர் மீது மறைந்த முன்னாள் அமைச்சர் டி.எஸ். டிகோலே புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து பிப். 20 அன்று வெளியான தீர்ப்பில் இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ரூ.50,000 அபராதமும் விதித்து நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரண்டு பேரை நீதிமன்றம் விடுவித்தது. இந்தக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபணமானால் கோகடே எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மாணிக்ராவ் மற்றும் சுனில் கோகடே ஆகியோர் மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி அமர்வின் முன் தண்டனைக்கு எதிராக நேற்று (பிப். 24) மேல்முறையீடு செய்தனர்.

அவர்களின் தண்டனையை இடைநிறுத்தம் செய்வதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, மேல்முறையீடு தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து பதில் கோரினர்.

மேலும், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி இறுதி தீர்ப்பு வரும் வரை இருவரும் ரூ. 1 லட்சத்திற்கு தனிப்பட்ட பத்திரம் மற்றும் ஜாமீன் பத்திரம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →