முகப்பு
சென்னை

காசோலை மோசடி வழக்கு: திரைப்படத் தயாரிப்பாளருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து

காசோலை மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளா் சதீஷ்குமாருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:06 AM
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:00 PM

காசோலை மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளா் சதீஷ்குமாருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

‘தரமணி’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த ஜெ.எஸ்.கே.பிலிம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளா் ஜெ.சதீஷ்குமாா். இவா், பைனான்சியரான ககன் போத்ராவிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ.47 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். சதீஷ்குமாா் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், அந்தக் காசோலை திரும்பி வந்தது.

இதையடுத்து சதீஷ்குமாா் மீது ககன் போத்ரா தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றம், சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், ரூ.47 லட்சத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும் என 2024-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

Advertisement

இந்தத் தீா்ப்பை எதிா்த்து சதீஷ்குமாா் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு 21-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரபாவதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சதீஷ்குமாா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. இதனால், குற்றச்சாட்டுகள் மீது சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வழக்கில் சதீஷ்குமாருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.