எதிர்காலம் போர் அல்ல, அமைதிதான்: பிரதமர் மோடி
பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பேசியது பற்றி..
இந்தியா சொல்வதை உலகம் கேட்கிறது, எதிர்காலம் போரில் அல்ல அமைதியில்தான் உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புவனேஸ்வரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல, ஜனநாயகம் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.
Advertisement
Advertisement
உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்கிறது, அது தனது சொந்தக் கருத்துக்களை மட்டும் வலுவாக முன்வைக்கவில்லை, உலகளாவிய தெற்கின் கருத்தையும் முன்வைக்கிறது. அதன் பாரம்பரியத்தின் வலிமையின் காரணமாக, எதிர்காலம் போரில் அல்ல, புத்தரில் (அமைதியில்) உள்ளது என்பதை உலகிற்குச் சொல்ல இந்தியாவால் முடிகிறது.
புலம்பெயர் மக்களை அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்திய தூதராகத்தான் எப்போதும் கருதுகிறோம். புலம்பெயர்ந்தோர் எங்கிருந்தாலும் நெருக்கடியான சூழ்நிலைகளின்போது அவர்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறினார்.
1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் புலம்பெயர்ந்தோர் முக்கிய பங்காற்றினர். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அவர்களின் உதவியை நாடியுள்ளது. இந்தியா ஒரு இளம் நாடு மட்டுமல்ல, திறமையான இளைஞர்களைக் கொண்ட நாடு.
இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவர்கள் திறமையுடன் செல்வதை அரசு உறுதிப்படுத்த முயல்கிறது. உலகம் முழுவதும் திறமையான தொழிலாளர்களின் தேவை உள்ளதென்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகிற்கு நேரில் கண்டறிவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாம் பன்முகத்தன்மையைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நமது வாழ்க்கை பன்முகத்தன்மையின் மூலம் இயங்குகிறது என்று அவர் கூறினார்.