“இது இந்தியா; வட கொரியா அல்ல” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை (பிப். 26) விமர்சித்தார்.
தில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இளையோர் காங்கிரஸார் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருப்பதாவது : ‘இன்றைய இந்தியாவில், சமரசக் கொள்கையுடன் திகழுமொரு பிரதமரின் ஆட்சியின்கீழ், அமைதி வழிப் போராட்டமும் பெருங்குற்றச் செயலாக மாற்றப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் ஜனநாயகத்தில் ‘கேள்விகள் கேட்பதைச் சதி என்று பழிக்கும்’ திசையில் தள்ளுகின்றனர்.
எந்த விவகாரமானாலும், அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து உங்கள் குரலை நீங்கள் அரசமைப்பு வழியாக உயர்த்தினாலும், தடியடியும் சட்ட நடவடிக்கைகளும் சிறையும் கிட்டதட்ட உறுதி!
கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் ரப்பர் தோட்டாக்களும் காவல்துறை தடியடியும் இவையே அதிகாரவர்க்கத்தின் பேச்சுமொழிகளாக உள்ளன.
என்ன ஜனநாயகம் இது? சமரசம் செய்துகொண்டே இருக்குமொரு பிரதமர், கேள்விகள் கேட்டால் பயப்படுகிறார்? ஒடுக்குமுறை நடவடிக்கையே அரசு நிர்வாகத்தின் இயல்பாக மாறியிருக்கிறது?
கேள்விகள் எழுப்புவது ஜனநாயகத்தின் பலவீனம் அல்ல; அதுவே அதன் வலிமை. விமர்சனங்களுக்கும் எதிர்வினைகளுக்கும் அரசு செவிமடுத்து பொறுப்பேற்றுக்கொண்டாலே ஜனநாயகம் வலுவாக வளரும்.
இது இந்தியா; வட கொரியா அல்ல - மோடி அவர்களே. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களைத் தாமே ஒட்டுமொத்த தேசமென்று நினைத்துக்கொண்டு செயல்பட்டால் அப்போது ஜனநாயகம் மடியும்’ என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அரசுக்கெதிராக பல்வேறு விமர்சனங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
சர்வாதிகாரப்போக்குடன் ஆட்சி நடைபெறும் வட கொரியாவுடன் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை ஒப்பிட்டு ராகுல் காந்தி பதிவிட்டுள்ள விமர்சனம் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.