மோடி பதவி விலக வேண்டும்! பிரதமர் வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!
தில்லியில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்துவது பற்றி...
தில்லியில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயற்சித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களான இளைஞர்கள், மாணவர்கள் மீது நேற்று தில்லி காவல்துறை தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. இதில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து இன்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக இன்று பேரணி நடத்தினார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து ராகுல் காந்தி பேரணி நடத்தினார். காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச் செயலர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் வீடு வரை பேரணியாகச் சென்ற அவர்கள், மோடியின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும், இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்' என முழக்கமிட்டு வருகின்றனர்.
இதையடுத்து அங்கு வந்த தில்லி காவல் துறை, ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,
"இளம் மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் குறித்துப் பதிலளிக்கக் கோரி, நாங்கள் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றோம்.
இவ்விவகாரத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை.
இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்ததற்காகப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Congress MPs including Lok Sabha LoP Rahul Gandhi, Priyanka Gandhi Vadra, KC Venugopal and others hold a protest at Lok Kalyan Marg, demanding the Prime Minister's resignation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.