வளர்ந்த இந்தியா: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக கடமையை இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கடமையை இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணம் சாத்தியமற்றது என்று சிலர் கருதுவதாகவும், ஆனால், இளைஞர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற ’வளர்ந்த இந்தியாவின் இளம் தலைவர்கள்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது,
’’2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்கள் தங்களுக்கு செளகரியமான சூழலில் இருந்து வெளியே வரவேண்டும். இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல இளைஞர்கள் கட்டாயம் பெரிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலக்குகளே நமது வாழ்வின் ரத்தம், ஆரோக்கிய வாழ்வுக்கான மருந்து. கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை வெற்றிகரமாக எட்டியுள்ளோம்.
திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலை, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என சிலவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நாட்டில் பெரிய மாற்றங்களுக்கு மட்டுமல்ல, அந்த மாற்றத்தை அனுபவிக்கும் பயனாளிகளாகவும் இன்றைய இளைஞர்கள் இருப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. செளகரியமான சூழலில் இருந்து இளைஞர்கள் வெளியேற வேண்டும். அது மிகவும் ஆபத்தானது. அடுத்தக்கட்டத்தை நோக்கிய உத்தரவாதத்துக்கு செளகரியங்களைத் தாண்டிய ஆபத்துகளைக் கடக்க வேண்டும்.
1930களில் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார சிக்கலை சந்தித்தது. எனினும் அதனை சரி செய்து புதிய சூழலை உருவாக்கியது. அந்த சமயத்தில் சிங்கப்பூரும் மிக மோசமான சூழலில் இருந்தது. ஆனால், சரியான தலைமை மற்றும் வழிகாட்டியால் அந்நாடு தற்போது உயர்ந்துள்ளது. உலகின் பொருளாதார மையமாக மாறியுள்ளது.
நாம், சுதந்திரக் கனவு கண்டோம். போராடி, தியாகம் செய்து விடுதலை பெற்றோம். அடுத்த 25 ஆண்டுகளும் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகள். 2047ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும். அந்த இலக்கை இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!