சாகும் வரை சிறை போதாது! நீதிமன்றம் முன்பு மருத்துவர்கள் போராட்டம்!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை போதாது எனக் கூறி மருத்துவர்கள் போராட்டம்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை போதாது எனக் கூறி இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் குவிந்த மருத்துவர்கள், தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு அதற்கு அதிருப்தி தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று (ஜன. 20) வெளியானது.
இதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.
வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்புக்கு முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்திருந்தார். இதேபோன்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும் மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திருப்திகரமாக இல்லை எனக் கூறி இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!