கும்பமேளா துயர சம்பவம் கவலையளிக்கிறது: மாயாவதி
கும்பமேளா கூட்ட நெரிசலில் பலர் பலியானது வருத்தமளிப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி பலர் பலியானதும், பலர் காயமடைந்துள்ள செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில் மௌனி அமாவாசையான இன்று (ஜன.29) திரிவேணி சங்கமத்தில் புனித நீராட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Advertisement
இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பிரயாக்ராஜில் சங்கமத்தில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் சம்பவம் மிகவும் கவலையளிக்கின்றது. இதுபோன்ற நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட விபத்தில் பக்தர்கள் உயிரிழந்ததற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவதும், தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த சம்பவத்திற்கு நிர்வாகத்தைக் குற்றம் சாட்டினார்.