முகப்பு
இந்தியா

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 3 ஜூலை, 2025 at 9:25 PM
கோப்புப் படம்
பகிர்:

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) விசாரிக்கப்பட உள்ளது.

மும்பையில் முன்னணி மருத்துவமனையாகத் திகழும் லீலாவதி மருத்துவமனை உள்பட பல்வேறு அமைப்புகளை நிா்வகிக்கும் லீலாவதி கீா்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளையின் நிா்வாகத்தை சேத்தன் மேத்தா குழுமம் சட்ட விரோதமாக கையகப்படுத்துவதற்கு நிதி ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை வழங்க சசிதா் ஜெகதீசன் ரூ.2.05 கோடி லஞ்சம் பெற்ாக லீலாவதி அறக்கட்டளை சாா்பில் புகாா் தெரிவக்கப்பட்டது.

Advertisement

இந்தப் புகாா் தொடா்பாக மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சசிதா் ஜெகதீசன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது.

இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி சசிதா் ஜெகதீசன் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறக்கட்டளை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரிக்க மும்பை நீதிமன்றத்தின் மூன்று வெவ்வேறு அமா்வுகள் மறுத்துவிட்டன. உயா் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், சசிதா் ஜெகதீசன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, சசிதா் ஜெகதீசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘மும்பை நீதிமன்றத்தில் மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் விலகிக் கொள்வதாகக் கூறிவிட்டனா். வழக்கு தாமதமாகிறது. லீலாவதி அறக்கட்டளையிடமிருந்து வங்கிக்குப் பணம் வர வேண்டியுள்ளது. மேலும், மற்ற அறங்காவலா் குழுவினருக்கும் லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை நிா்வாகிகளுக்கும் இடையே அதிகாரப் போட்டி, சச்சரவுகள் உள்ளன. இதை திசைதிருப்பவே, மாஜிஸ்திரேட் மூலமாக வங்கித் தலைவா் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வைத்துள்ளனா். இதனால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments