24-வது முறையாக டிரம்ப் பேச்சு! கூட்டத்தொடரில் மோடி பதிலளிக்க வேண்டும்! - காங்கிரஸ்
இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றி டிரம்ப் கூறியதற்கு காங்கிரஸ் கருத்து...
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதற்கு, வரும் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7ல் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் மேற்கொண்டதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. போர் தொடங்கி 4 நாள்களில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தியதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
Advertisement
Advertisement
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மீண்டும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். மே 10 முதல் இன்று வரை அமெரிக்க அதிபர் டிரம்ப், குறிப்பிட்ட இரண்டு விஷயங்களை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
ஒன்று, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாகவும் இரண்டாவது, இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் இதுவரை 24 முறை கூறியுள்ளார்.
இப்போது, போரில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. பிரதமர் மோடி அவரது மௌனத்தைக் கலைக்க வேண்டும். வேறு எந்தவொரு தலைவரும் இப்படி இருக்கமாட்டார். கூட்டத்தொடரில் காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் இதுதொடர்பாக சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கும். டிரம்ப் கூறியது பற்றி பிரதமர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். எங்களுக்கு மாற்று வீரர் தேவையில்லை. பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள்(ஜூலை 21) தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Congress demands PM Modis statement in Parliament on Trumps five jets shot down claim and india - pakistan war
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.