மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்
கேரள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் கேரளத்தில் இன்று மழையும் இன்றி வெயிலும் இன்றி நல்ல வானிலை நிலவியது.
இந்த நிலையில், புதிய கல்வியாண்டைக் குறிக்கும் வகையில், கேரளத்தில் இன்று பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு சீருடைகளை அணிந்து பள்ளிகளுக்குத் திரும்பினர்.
Advertisement
Advertisement
பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மலர்க்கொத்து கொடுத்தும், பலூன்கள் அலங்கரித்தும் மாணவர்களை வரவேற்றனர். மேலும் சில கல்வி நிறுவனங்களில் மேள தாளம் வாசித்து மாணவர்களை வரவேற்றனர்.
இதற்கிடையில், முதல்வர் பினராயி விஜயன், ஆலப்புழாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய விளக்கேற்றி, பள்ளியின் முறையான மறு திறப்பு விழாவான "பிரவேசனோத்சவம்" தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், முதல்வர் கல்வி தொடர்பான பொருள்களை மாணவர்களுக்கு விநியோகித்தார். தனது உரையின்போது, கல்வி மூலம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஞானத்தையும் பகுத்தறிவையும் மாணவர்கள் உள்வாங்க வேண்டும்.
நாம் எல்லாவற்றையும் விமர்சன நுண்ணறிவுடன் அணுக வேண்டும். மதச்சார்பற்ற சிந்தனை, ஜனநாயக உணர்வு மாணவர்களின் மனதில் விதைக்கப்பட வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
புதிய கல்வியாண்டில் மாநில அரசால் செயல்படுத்தப்படும் விரிவான மாற்றங்கள் குறித்தும் பினராயி விஜயன் விவரித்தார்.
இந்த விழாவில் முதல்வருடன், பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியன் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டனர்.
புதிய கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளிகளுக்கான நேர மாற்றங்கள் மற்றும் மதிப்பு அடிப்படையிலான கல்வி உள்ளிட்ட பல புதிய மாற்றங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.