கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
கன்னட மொழி விவகாரம் குறித்து கன்னட ஃபிலிம் சேம்பருக்கு கமல் எழுதிய கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில், கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு நடிகர் கமல் எழுதிய கடிதத்தில், கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
கர்நாடகத்தில், தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை, இன்று பிற்பகலில் மீண்டும் தொடங்கியபோது, கமல் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னடம் குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிப்பதாக கமல் அளித்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத கர்நாடக உயர் நீதிமன்றம், மன்னிப்புக் கேட்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஈகோ? என்று நீதிபதி நாகபிரசன்னா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம், அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே, ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள் என்றும் கமல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.