கர்நாடக தலைமை விவகாரம் குறித்து, ”நானும் முதல்வர் சித்தராமையாவும் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத் தெரியும்” என துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்பார் என அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் உருவாகின.
இதையடுத்து, முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். மேலும், முதல்வராக சித்தராமையா தொடர்வார் எனக் கூறப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றது.
இந்த நிலையில், பெங்களூரில் இன்று (பிப். 10) தில்லிக்குச் செல்லும் முன்பு செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:
“மற்றவர்களுக்கு குழப்பம் இருக்கலாம். ஆனால், எனக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையில் எந்தவொரு குழப்பமும் இல்லை. நாங்கள் என்ன பேசினோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தனிமையில் பேசவில்லை. கட்சியின் தலைமையுடன் பேசினோம். அந்தப் புரிதலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல்கள் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தில்லி செல்வதாகவும், இதுபற்றி, முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.