நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!
கரோனா நோய்த் தொற்றின் தற்போதைய நிலவரம் பற்றி...
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கேரளத்தில் 192 பேருக்கும் குஜராத்தில் 107 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 498 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5,364ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 4,866 ஆக இருந்தது. கரோனா பாதித்தவர்களில் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளத்தில் இரண்டு பேர், கர்நாடகம் மற்றும் பஞ்சாபில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். நால்வரும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக 8 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது அதிகரித்தாலும் கரோனா பாதித்து காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.