நாட்டில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடல்! பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம்!
பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகளவில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது பற்றி...
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பாஜக ஆளும் அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
அதில், நாடு முழுவதும் கடந்த 2020 - 21 ஆம் ஆண்டில் 10,32,049 ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2024 - 25 ஆம் ஆண்டில் 10,13,322 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் 6,902 பள்ளிகளும், அஸ்ஸாமில் 2,008 பள்ளிகளும், ஒடிஸாவில் 1,631 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 4,382 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களான தமிழ்நாடு, பிகார், உத்தரப் பிரதேசங்களில் அரசுப் பள்ளிகள் கடந்த 5 ஆண்டுகளைவிட தற்போது கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன.
மேலும், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஹரியாணா, ஜார்க்கண்ட், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனியார் பள்ளிகள் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.