உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!
உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டரில் கொலை...
உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் மகள் பெற்றோர்களுடன் சாலையோரம் புதன்கிழமை உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது குழந்தையை மறைவிடத்துக்குத் தூக்கிச் சென்ற நபர், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படைகளை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர்.
சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், குற்றவாளியின் இருசக்கர வாகனத்தை வைத்து குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர் தீபக் வர்மா என்பதை கண்டுபிடித்தனர்.
அந்த நபர் குறித்து தகவல் அளித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று காவல் ஆணையர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், 20 மணிநேரத்தில் குற்றவாளியை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
ஆனால், காவலர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற தீபக் வர்மாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த தீபக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.