முகப்பு
இந்தியா

நிர்பயா போல் இறந்திருக்க வேண்டும் : உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!

8 ஆண்டுகளாகியும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டேன் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக வேதனை..

Updated On : 10 பிப்ரவரி 2026, 6:33 pm IST
உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் - படம் - பிடிஐ (கோப்புப் படம்)
பகிர்:

தில்லியில் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான நிர்பயாவைப் போல நானும் இறந்திருந்தால் நான் வன்கொடுமைக்குள்ளானது உடனே நம்பப்பட்டிருக்கும் என உன்னாவ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

தான் பாதிக்கப்பட்டேன் என்பதை நிரூபிக்க தனக்கு 8 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும் இன்னும் தான் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டேன் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர் குல்தீப் சிங் செங்கார், தாக்கல் செய்த ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு அளிக்கும்போது உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் வந்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், இன்னும் 3 மாதங்களுக்குள் முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:

''நான் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருந்தேன். குல்தீப் சிங் செங்காருக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. கூடிய விரைவில் வழக்கு முடிக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் அனைத்து விசாரணையும் முடிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

என் தந்தை திரும்ப வரப்போவதில்லை. குல்தீப் சிங் செங்காரின் சகோதரர்களான அதுல் சிங் செங்கார், ஜெய்தீப் சிங் செங்கார் ஆகியோர் என் தந்தையின் கொலைக்கு காரணமானவர்கள். எனினும் அவர்கள் மருத்துவக் காரணங்களுக்காக வெளியே உள்ளனர். இதில் தொடர்புடைய காவலர்கள் அனைவரும் வெளியே சுதந்திரமாக உள்ளனர்.

என் மீது கொடூரமானச் செயல் புரிந்ததற்காக குல்தீப் சிங் செங்கார் உள்ளே இருக்கிறார். அவர் என்னை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினார். இதை எப்படி நிரூபிப்பேன்? நான் உயிரோடு இருக்கிறேனே? நான் இதைச் செய்ய வேண்டுமா?

நான் நிர்பயாவைப் போல இறந்திருந்தால், நான் பாதிக்கப்பட்டதை அனைவரும் உடனே நம்பியிருப்பார்கள். நான் உயிரோடு இருக்கிறேன்.

எனக்கு நடந்த கொடுமையை நிரூபிக்க எனக்கு ஆண்கள் பல தேவைப்படுகின்றன. 8 ஆண்டுகளாக போராடி வருகிறேன். இருந்தபோதும், நான் கற்பழிக்கப்பட்டேன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இது ஒரு சாதாரண விபத்து என்று செங்காரின் மகள் கூறுகிறார். விபத்து எப்படி சாதாரணமாகும். நான் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தேன். என் தந்தைக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். நீதியின் மூலமே என் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்'' என உருக்குமாகக் கூறினார்.

summary

If I Died Like Nirbhaya, Everyone Would Have Believed Unnao Rape Survivor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.