வங்கதேசம்: சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!
பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்குத் தூக்கு! வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
வங்கதேசத்தில் பாலியல் வன்கொடுமைக் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் 8 வயது சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சோஹெல் ராணா மற்றும் அவரது மனைவி சுவப்ணா காதுன் ஆகியோர் மீதான் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவ்விருவருக்கும் மரண தண்டனையுடன் முறையே 5 லட்சம் வங்கதேச தாக்கா(4,073 டாலர்) மற்றும் 2 லட்சம் வங்கதேச தாக்கா அபராதமும் விதித்து கீழமை நீதிமன்றத்தால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த மே 19-இல், தாக்கா மாநகரின் பல்லாபி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து மேற்குறிப்பிட்ட சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்தச் சிறுமி பாலியல் கொலையில் அதே குடியிருப்பு வளாகத்திலிருந்த ராணாவும் அவரது மனைவியும் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிலிருந்து அடுத்த ஐந்து நாள்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது குறித்து, உயிரிழந்த சிறுமியின் அப்பா பேசுகையில், தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளதாகவும், வெகு விரைவில் இத்தீர்ப்பு நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் தாம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.