நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!
நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி...
நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட் முதுநிலைத் தேர்வு) வருகிற ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது 'இரண்டு ஷிப்ட் வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது' என்று கூறி நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்வை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
புதியதாக ஒரே ஷிப்ட் முறையில் நடத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும் என்று தேர்வு வாரியம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நீட் முதுநிலைத் தோ்வை ஆக.3-ஆம் தேதி ஒரே ஷிப்டாக காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்த ஒப்புதல் அளிக்குமாறு தேர்வு வாரியம் மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், நீட் முதுநிலைத் தேர்வை வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த நீதிபதிகள் அனுமதி வழங்கியதுடன் கண்டிப்பாக தேர்வை ஒரே ஷிப்டாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், தேர்வு நடத்த மேலும் கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும் கூறினர்.