பஞ்சாபில் விமானப் படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!
பஞ்சாபில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் பதான்கோட் மாவட்டத்தில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அபாச்சி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து இன்று (ஜூன் 13) புறப்பட்ட அபாச்சி ரக ஹெலிகாப்டர், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடுவழியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கான, காரணம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், ஹெலிகாப்டரை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி இருவரது உயிருக்கும் எந்தவொரு ஆபத்துமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து, வெளியான விடியோ மற்றும் புகைப்படங்களில், விமானப் படையின் ஹெலிகாப்டர் திறந்தவெளியில் தரையிறக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
இதன் பின்னர், மீண்டும் அந்த ஹெலிகாப்டரின் விமானிகள் அதனைப் பறக்க வைத்து பதான்கோட் விமானப் படையின் தளத்துக்குக் கொண்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த வாரம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மற்றொரு அபாச்சி ரக ஹெலிகாப்டர், உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்ப்பூரில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கேரளத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை! நாளை ரெட் அலர்ட்!