கேரளத்தில் கனமழைக்கு 4 பேர் பலி!
கேரளத்தில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் பலியானது பற்றி...
கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளத்தின் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை பதிவானது.
அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் வயநாடு அலட்டில் 178 மி.மீ., படிஞ்சரத்தராவில் 162 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி, திருச்சூர், பத்தினம்திட்டா, கோழிக்கோடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
இன்றும் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.