மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிப் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்: பாஜக விமர்சனம்
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய் பிரசாரம் மேற்கொள்வதாக பாஜக குற்றச்சாட்டு..
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய்யான மற்றும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 4-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், தற்போது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அரசின் அறிவிப்பைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் ஏமாற்று வேலை என்றும், இந்த கணக்கெடுப்பில் சாதியைச் சேர்ப்பது குறித்து மௌனம் காத்து வருவதாகவும், இது அரசின் மற்றொரு தலைகீழ் திருப்பமா என்றும் திங்களன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
காங்கிரஸ் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், பொய்யான கூற்றுகளால் மக்களைத் தவறாக வழிநடத்துகிறது. இதுபோன்ற அற்ப செயலை மேற்கொள்வதன் மூலம் எதிர்க்கட்சியின் முக்கிய நோக்கம் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸின் நோக்கம் சரிந்துவருவதால் பொய்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசு வெளியிட்ட அறிவிக்கையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மறைவான, மங்கலான மற்றும் தீய பார்வையால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து மோடி அரசின் முடிவில் திட்டவட்டமாக விளக்கப்பட்டுள்ளதைக் காண முடியவில்லை. காங்கிரஸின் எண்ணங்கள் நிறைவேறவில்லை என்று அவர்கள் உணருவதால், பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் எப்போதும் சாதியின் பெயரால் வாக்கு வங்கி அரசியலைச் செய்து வருகிறது,
ஆனால் பின்தங்கிய சமூகங்களுக்கு எதுவும் தெரியாது என்று திரிவேதி குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: பேரொளி வீசும் பல்லவர் கட்டுத்தளிகள்! - நூல் அறிமுகம் | விமர்சனம்