அகமதாபாத் விமான விபத்தில் இயக்குநர் மகேஷ் ஜிராவாலா பலியானது உறுதி செய்யப்பட்டது!
குஜராத்தி திரைப்பட இயக்குநர் மகேஷ் ஜிராவாலா அகமதாபாத் விமான விபத்தில் பலியானது உறுதி செய்யப்பட்டது.
காணாமல் போன குஜராத்தி திரைப்பட இயக்குநர் மகேஷ் ஜிராவாலா அகமதாபாத் விமான விபத்தில் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நரோடாவில் வசிக்கும் மகேஷ் கலாவாடியா என்கிற மகேஷ் ஜிராவாலா, இசை ஆல்பங்களை இயக்கி வருபவரும், குஜராத்தி திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். விமான விபத்து நடைபெற்ற ஜூன் 12 அன்று பிற்பகலில், லா கார்டன் பகுதியில் ஒருவரைச் சந்திக்கப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக காவல்துறையில் மகேஷின் மனைவி புகார் அளித்திருந்தார்.
காணாமல் போன மகேஷ், விபத்து அன்று பிற்பகல் 1.14 மணிக்கு அவரது மனைவிக்கு போன் செய்து, சிறிது நேரத்தில் வீடு திரும்பப் போவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பாததாலும் மீண்டும் போன் செய்தபோது அணைக்கப்பட்டிருந்ததாலும் காவல்துறையில் புகார் அளித்ததாக அவரது மனைவி ஹெடல் தெரிவித்துள்ளார்.
மேலும், பகல் 1.39 மணிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், மகேஷின் செல்போன் 1.40 மணிக்கு அணைக்கப்பட்டிருக்கிறது. அவரது ஸ்கூட்டர் மற்றும் செல்போனும் கண்டுபிடிக்காத நிலையில், மகேஷின் மனைவி டிஎன்ஏ மாதிரியையும் காவல்துறையினர் பெற்றனர்.
போலீஸாரின் கூற்றுப்படி..
மகேஷ் ஜிராவாலாவின் ஆக்டிவா ஸ்கூட்டர் ஷாஹிபாக் அருகே விபத்து நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட பின்னர் விபத்து நடைபெற்ற இடத்தில் கண்டறியப்பட்டது.
டிஎன்ஏ சோதனையில் உறுதி..
அவருடைய ஸ்கூட்டர் சம்பவ இடத்தில் இருப்பதையடுத்து, அவர் விமான விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. அதன்பின்னர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் இயக்குநர் மகேஷ் ஜிராவாலாவின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
தடயவியல் சோதனைக்குப் பிறகு மகேஷின் உடலை ஏற்க அவரது குடும்பத்தினர் முதலில் மறுத்து வந்தனர். அதன்பின்னர் ஆக்டிவா வண்டியின் எண் மற்றும் உறுதிசெய்யப்பட்ட டிஎன்ஏ இவற்றின் அறிக்கை உள்பட வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 231 பேரின் டிஎன்ஏ உறுதிசெய்யப்பட்டுள்ளன. அதில் 210 உடல்கள் அவரது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 155 இந்தியர்கள், 36 பிரிட்டிஷ் குடிமக்கள், போர்ச்சுகலைச் சேர்ந்த ஏழு பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், மற்றும் 9 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்களாவர்.
நரோடாவில் வசிக்கும் மகேஷ் ஜிராவாலா, குஜராத்தி மொழி இசை விடியோக்கள், விளம்பரங்கள், பிராந்திய சினிமாவில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். அவர் மகேஷ் ஜிராவாலா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். அவரது தொழில் வாழ்க்கையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். 2019 ஆம் ஆண்டில், ஆஷா பஞ்சால் மற்றும் விருதி தக்கர் நடித்த பிராந்திய திரைப்படமான காக்டெய்ல் பிரேமி பேக் ஆஃப் ரிவெஞ்ச் இயக்கியவர். ஜிராவாலாவுக்கு அவரது மனைவி ஹேடல் மற்றும் மகள், மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.