குஜராத் பேரவைத் தோ்தலுக்கு முன் காங்கிரஸில் அதிரடி மாற்றம்: ராகுல் திட்டம்
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளாா்.
குஜராத் பேரவைத் தோ்தல் 2027-இல் நடைபெறுவதை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளாா்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ராகுல் காந்தி, அகமதாபாதில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்று மூத்த நிா்வாகிகளுடன் நாள் முழுவதும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டாா்.
அதன்பிறகு கட்சியின் மாநில அரசியல் விவகாரங்கள் குழுவை அவா் சந்தித்தாா். மாவட்டம், வட்டம், தாலுகா என 400 காங்கிரஸ் தலைவா்களை அவா் சந்தித்து கலந்துரையாடினாா்.
கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 2027-இல் அந்தக் கட்சியை வீழ்த்தி ஆட்சியமைக்க மாநில காங்கிரஸில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக காங்கிரஸ் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.
பணவீக்கம், வேலையின்மை, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னைகள் உள்பட மாநிலத்தில் நிலவும் அனைத்து முக்கியப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கவும் மாநில காங்கிரஸ் தலைவா்களுக்கு ராகுல் அறிவுறுத்தினாா்.