தங்கம் கடத்தல் விவகாரம்: நடிகையின் தந்தை டிஜிபியிடம் விசாரணை!
ரன்யா ராவின் தந்தையிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது பற்றி...
தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவின் தந்தையும் கர்நாடக டிஜிபியுமான கே. ராமசந்திர ராவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைமைச் செயலாளர் கெளரவ் குப்தாவை நியமித்துள்ளதாக முதல்வர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை காலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை கர்நாடக மாநில காவல்துறை வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் நிர்வாக இயக்குநராகவுள்ள டிஜிபி ராமசந்திர ராவ் என்பதால், குற்றத்தில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரிக்க புலனாய்வு அதிகாரியாக கெளரவ் நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடனடியாக விசாரணையைத் தொடங்கி ஒரு வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க கெளரவ் குப்தாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தங்கம் கடத்தல் நடிகை ரன்யா ராவுக்கு வலை விரித்தது எப்படி? பரபரப்பான பின்னணித் தகவல்கள்!
கர்நாடகத்தைச் சேர்ந்த கன்னட நடிகையும் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளுமான ஹர்ஷவர்தினி ராவ் என்ற ரன்யா ராவ் (33), உடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்துவைத்து துபையில் இருந்து கடத்தியதற்காக மாா்ச் 3-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரன்யாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம், ரூ. 4.73 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மார்ச் 4 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரன்யா, தங்கக் கட்டிகளை கடத்திவந்ததை ஒப்புக்கொண்ட நிலையில், மார்ச் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.