மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!
இந்திய வெளிநாட்டுக் குடியுரிமைக்கான அட்டையையும் நினைவுப் பரிசாக வழங்கினார்.
மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார்.
மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிமைக்கான அட்டையையும் நினைவுப் பரிசாக வழங்கினார். இதோடு மட்டுமின்றி பிகார் மக்கள் விரும்பி உண்ணும் மக்கானாவையும், பனாரஸ் புடவையையும் பரிசாக வழங்கினார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Advertisement
மோரீஷஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் உடனான சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஆழ்ந்த பார்வைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று ரீதியாக உள்ள தொடர்பு மற்றும் மக்கள் பிணைப்பு குறித்து விவாதித்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது,
''தரம்பீர் கோகூலுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இந்தியா குறித்தும் அதன் கலாசாரம் குறித்தும் அவர் நன்கு அறிந்திருந்தார். மோரீஷஸ் தேசிய நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை மேலும் மேம்படுத்துவது இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி