நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!
கொசுக் கடியால் 22 சதவிகிதம் பேர் தூக்கத்தை இழப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
நாடு முழுவதும் 348 மாவட்டங்களில் 43,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 61 சதவிகித ஆண்களிடமும் 39 சதவிகித பெண்களிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த 12 மாதங்களில் இரவு நேரங்களில் சராசரியாக எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள், இடையூறு இல்லாமல் எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள் போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
வயது, இரவு நேர உணவு, தூங்குவதற்கு முன் செல்போன் அல்லது படம் பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்கள் தூக்கம் பாதிக்கப்பட காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 2% பேர் 8 மணிநேரத்துக்கு மேலாகவும், 39% பேர் 6 - 8 மணிநேரமும், 39% பேர் 4 - 6 மணிநேரமும், 20% பேர் 4 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்குவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ள 14,952 பேரில் 72 சதவீதம் பேர் கழிப்பறையைப் பயன்படுத்த எழுந்ததே முதன்மைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
25 சதவிகிதம் பேர் பணிச் சூழல் காரணமாகவும், 22 சதவிகிதம் பேர் சப்தங்கள் மற்றும் கொசுக்கடி காரணமாகவும், 9 சதவிகிதம் பேர் தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்ற மருத்துவக் காரணமாகவும், 9 சதவிகிதம் பேர் நண்பர்கள், குழந்தைகள் காரணமகாவும் ஏற்படும் இடையூறுகளால் தூக்கத்தை இழப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : இந்தியரா இவர்? உலக ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஹனுமன்கைண்ட்!
சரியான தூக்கம் இல்லாதவர்கள், அதனை ஈடுசெய்யும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேரங்களில் தூங்குவதாக 36% பேர் தெரிவித்துள்ளனர். மேலும், வார இறுதிநாள்களில் காலை நேரங்களில் அதிக நேரம் தூங்குவதாக 23% பேரும் தெரிவித்துள்ளனர்.
போதிய தூக்கம் இல்லாதது, தூக்கத்தில் அடிக்கடி விழிப்பது போன்றவை இருதய நோய்கள், 2ஆம் வகை நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான தூக்கத்தை ஊக்குவிக்க, காபி குடிப்பதைக் குறைப்பது, படுக்கைக்கு முன்பு செல்போன், தொலைக்காட்சிகள் பார்ப்பதைத் தவிர்ப்பது, வசதியான படுக்கையில் முதலீடு செய்வது போன்றவை ஆய்வு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.