மத்தியப் பிரதேசத்தில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் பற்றி சர்ச்சையாகப் பதிவிட்ட நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூர் நகரைச் சேர்ந்த நபர் இன்ஸ்டாகிராமில் முஸ்லிம்கள் தொடர்பான சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 10.30 மணியளவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்ஸ்டாகிராமில் தவறாகப் பதிவிட்ட நபரைக் கைது செய்யக்கோரி அங்குள்ள சந்தைப் பகுதியில் கூடி கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
சம்பவம் குறித்து அறிந்ததும், உள்ளூர் போலீசார் இரவு 11.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கும்பலைக் கலைக்க முயன்றனர். இருப்பினும், கூட்டம் கலையவில்லை.
இதனைத் தொடர்ந்து, மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் பதிவிட்ட தேவேஷ் தலால் (21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
“வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, போராட்டக்காரர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் அவர்களுடன் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தோம். அதன் பிறகே போராட்டம் முடிவுக்கு வந்தது. இதுபோன்ற பதிவுகளின் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சரியான நேரத்தில் காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் இது வகுப்புவாதக் கலவரத்திற்கு வித்திட்டிருக்கும் என அந்தப் பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.