முகப்பு
இந்தியா

சமூக ஊடக, இதழ்களின் இணையதளங்கள் தடை விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா?: ஆ.ராசா கேள்வி

சமூக, ஊடகம், இதழ்களின் இணையதளங்களை முடக்குவதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பிறப்பிக்கப்படும் முன் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா?

Updated On : 20 மார்ச் 2025, 8:09 am IST
ஆ.ராசா
பகிர்:

புது தில்லி: சமூக, ஊடகம், இதழ்களின் இணையதளங்களை முடக்குவதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பிறப்பிக்கப்படும் முன் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்று மக்களவையில் நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஆ.ராசா கேள்வி எழுப்பினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில், ‘சமூக ஊடங்கள், இதழ்கள் போன்றவற்றின் இணையதளங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பும், அபராதங்கள் பிறப்பிப்பதற்கு முன்பும் உரிய சட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?

ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக பல நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால்,, டிஜிட்டல் உள்ளடக்கத்தைத் தடுப்பதில் அரசாங்கம் அதிக வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்த விரும்புகிறதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதற்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சா் ஜிதின் பிரசாதா புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில்,

அரசாங்கத்தின் கொள்கைகள், இணையதளப் பயனா்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், இணையம் எந்த வகையான சட்டவிரோத உள்ளடக்கம் அல்லது தகவல்களிலிருந்தும் விடுபட்டிருப்பதையும் உறுதி செய்கிறது.

இந்த இலக்கை அடைய உதவும் வகையில், மத்திய அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, ‘தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடக நிறுவனங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு விதிகள், 2021(ஐடி விதிகள்)’ என்பதை அறிவிக்கை செய்துள்ளது.

இந்த விதிகள் சமூக ஊடக நிறுவனங்கள உள்ளிட்ட நிறுவனங்கள் மீது குறிப்பிட்ட கடமைகளை விதிக்கின்றன, அவற்றின் கடமைகளைச் செய்யும்போது உரிய அக்கறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கடமைகளுக்கு இணங்கத் தவறினால், அவா்களால் கிடைக்கப்பெற்ற எந்தவொரு மூன்றாம் தரப்பு தகவல், தரவு அல்லது தகவல் தொடா்பு இணைப்புக்கான பொறுப்பிலிருந்து விலக்கை இழக்க நேரிடும். மேலும் சட்டத்தின்படி அதற்கான பொறுப்பையும் ஏற்க நேரிடும் என தெரிவித்துள்ளாா்.