குஜராத்: மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்!
குஜராத்தில் மோசமாகி வரும் அரசு பள்ளிகளின் நிலைமை குறித்து...
குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த இரு ஆண்டுகளில் 33 மாவட்டங்களில் உள்ள 54 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளின் நிலைமை பற்றி குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அதுபற்றிய தரவுகளை பேரவையில் சமர்ப்பித்தார்.
மாநிலம் முழுவதும் மூடப்படும் பள்ளிகள்
Advertisement
Advertisement
கடந்த இரு ஆண்டுகளில் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் 9 பள்ளிகளும், ஆரவல்லியில் 7-ம், ஆம்ரேலி, போர்பந்தரில் தலா 6-ம், ஜுனாகத் பகுதியில் 4-ம், சோட்டா உதேபூர், கட்ச், ராஜ்கோட்டில் தலா 3- பள்ளிகளும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் மூடப்பட்டன.
அதேபோல கேதா, ஜாம்நகர், நவஸ்ரீ ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளும் பாவ்நகர், தங், கிர் சோம்நாத், மஹேசனா, பஞ்சமஹால், சூரத், சுரேந்திரநகர் ஆகிய பகுதிகளில் தலா 1 பள்ளியும் மூடப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒற்றை வகுப்பறை பள்ளிகள்
பள்ளிகள் மூடப்படுவது மட்டுமின்றி பல உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்னைகள் குஜராத் கல்வித் துறையை மோசமான நிலையில் வைத்திருக்கின்றன.
341 அரசு தொடக்கப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையுடன் இயங்கி வருவதாக கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ சிலேஷ் பர்மார் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்திருந்தது.
அதை, நியாயப்படுத்தும் விதமாக ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மாணவர் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்கள் கூறப்பட்டன.
இதையும் படிக்க | பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!
மேலும், பாழடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படுவதும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலம் இல்லாததாலும் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள பள்ளிகளில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் 1,606 பள்ளிகள்
இதில், மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் குஜராத்தின் மொத்தமுள்ள 32,000 அரசுப் பள்ளிகளில் 1,606 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்குவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு ஆசிரியர் மட்டும் 1 முதல் 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இதன்மூலம், குஜராத்தில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் குறித்து கேள்வி எழுகின்றது. இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் அடிப்படை கல்வி சிதைவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.
மைதானம் இல்லை
உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்னைகள் வெறும் வகுப்பறையுடன் நின்று விடவில்லை. கிட்டத்தட்ட 5,012 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் இல்லை.
தொடக்கப் பள்ளிகள் மட்டுமின்றி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் இதே நிலைமைதான். 78 அரசுப் பள்ளிகள், 315 அரசு உதவிபெறும் பள்ளிகள், 255 தனியார் பள்ளிகள் மைதானங்கள் இன்றி இயங்கி வருகின்றன. குஜராத்தில் இதுபோல 12,700 பள்ளிகள் உள்ளன.
37 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் 509 தனியார் தொடக்கப் பள்ளிகளிலும் மைதானங்கள் இல்லை. இதனால், விளையாட்டில் ஈடுபட நினைக்கும் பல மாணவர்களின் நிலைமை கேள்விக்கு உள்ளாகிறது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு பிரச்னைகள், சரிந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் குஜராத் பள்ளிக் கல்வித்துறை மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.