முகப்பு
இந்தியா

3 ரஃபேல் உள்பட 5 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதா?

இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பரவும் தகவல் பற்றி...

Updated On : 7 மே, 2025 at 10:37 AM
ரஃபேல் விமானங்கள்.
பகிர்:

இந்திய விமானப் படையின் 5 போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்தியை இந்திய அரசின் உண்மை கண்டறியும் குழு மறுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையிடம், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரங்களாக புகைப்படங்களையும் விடியோக்களையும் இந்திய ராணுவம் இன்று வெளியிட்டது.

மேலும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உறுப்பினர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இந்தியாவின் தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் விமானப்படை நடத்திய பதில் தாக்குதலில் இந்திய விமானப் படையின் 3 ரஃபேல் போர் விமானங்கள், ஒரு மிக் - 21, ஒரு எஸ்.யூ. 30 மற்றும் ஒரு டிரோன் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன.

அதேபோல், இந்திய ராணுவப் பிரிவின் தலைமையகம், ஸ்ரீநகர் விமானப் படை தளம் ஆகியவை அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

“பாகிஸ்தான் ஆதரவாளர்களால் பகிரப்படும் பழைய புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பொய்ப் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இணையதளத்தில் பகிரப்படும் புகைப்படம், கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் விபத்துக்குள்ளான மிக் - 21 விமானத்தின் படமாகும்.

ஆபரேஷன் சிந்தூருக்கும் பழைய போர் விமானத்தின் புகைப்படத்துக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய ராணுவப் பிரிவின் தலைமையகம், ஸ்ரீநகர் விமானப் படை தளம் அழிக்கப்பட்டதாக பரவும் தகவலையும் மறுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →