புது தில்லி: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, பஹல்காம் தாக்குதல்தான் இந்த பிரச்னைகளுக்கான துவக்கப்புள்ளி. பயங்கரவாதிகளைக் குறிவைத்துத்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச் சடங்கு நடந்துள்ளது. ஆனால், இந்தியாவால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்று வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதற்கான புகைப்படங்களையும் அவர் காட்டினார். இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை என பாகிஸ்தான் கூறியது பொய் என்பது நிரூபணமாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் அணைகள் போன்ற கட்டமைப்பின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும். பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்தான், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. டிஎன்ஏ மூலம் உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவை தயாரித்தது. ஆனால், பாகிஸ்தான் குறுக்கிட்டு நிறுத்தியது. ஐ.நா. அறிக்கையில் டிஆர்எஃப் பெயரை சேர்க்கக் கூடாது என்று பாகிஸ்தான் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
மசூத் அஸார் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்துள்ளது. பிரச்னையை பெரிதாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது, நாம் பதிலடி மட்டுமே தருகிறோம். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரவில்லை என பாகிஸ்தான் கூறியது பொய் என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனால், பதற்றத்தை அதிகரிக்க இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மக்களை அல்ல. இந்தியாவின் 15 இடங்களைத் தாக்க பாகிஸ்தான் குறி வைத்தது. பாகிஸ்தான் தாக்குதலில், எல்லையில் இந்திய மக்கள் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதாரங்களை தந்தும்கூட, பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச் சடங்கு நடந்துள்ளது. ஆனால், இந்தியாவால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்றும், பாகிஸ்தானின் எந்த வழிபாட்டுத் தலங்கள் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்றும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.