முகப்பு
இந்தியா

ராணுவ வீரர்களுக்கு நாடே தலைவணங்குகிறது: ராஜ்நாத் சிங்!

பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவிற்குப் பதிலடியும் கொடுக்க தெரியும்..

Updated On : 15 மே, 2025 at 8:41 AM
ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங்
பகிர்:

சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் 9 பயங்கரவாதத் தளங்களை இந்தியா அழித்தது.

இந்திய ராணுவம் தொடர்ந்து மூன்று நாள் மேற்கொண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே, கடந்த மே 10-ம் தேதி இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து போர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து எல்லையில் படிப்படியாக அமைதியான சூழல் திரும்பியது.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் சென்றார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் செல்லும் அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் இருந்தனர்.

பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய ராஜ்நாத் சிங், வீரர்களின் தோள்களைத் தட்டி, கைகுலுக்கி தனது நன்றியைத் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரின் கீழ் தாக்கப்பட்ட பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். பயங்கரவாதிகள் ஆபரேஷன் சிந்துவை ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று அவர் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி உயிர்த்தியாகம் புரிந்தவர்களுக்கு நாடே தலைவணங்குகிறது. ராணுவத்தினருக்கு நாடே கடமைப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது. பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல, இந்தியாவிற்குப் பதிலடியும் கொடுக்க தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் கண்காணிப்பின் கீழ் வரவேண்டும். முரட்டுத்தனமான நாட்டில் அணுஆயுதங்கள் இருப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் மிகப்பெரியது இதுதான் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.