பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்ச் பகுதி கிராமங்களில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டது.
நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று அரிசி, மளிகைப்பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் மருந்துகளையும் குடியிருப்பாளர்களுக்கு விநியோகித்ததோடு, அவர்களின் தேவைகளையும் நேரடியாகப் பேசிக் கேட்டறிந்தனர்.
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிகள் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்டன. இந்திய எல்லைப் பகுதிகளின் பாதுகாப்புப் பணியை உறுதி செய்வதில் ராணுவம் மிக முக்கிய பங்கு வகித்தது, மேலும் அவர்கள் தற்போது எங்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்குகிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் ராணுவத்திற்கு ஆதரவாக நிற்கிறோம்" என்று பெருமிதத்துடன் கூறினார்கள்.
எங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை வழங்கியிருக்கிறார்கள். ராணுவ வீரர்கள் அனைவரும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறோம். நாங்கள் அவர்களுடன் துணை நிற்போம். அவர்கள் தீரத்துடன் எல்லைப் பகுதியில் காவல் நிற்கிறார்கள். பூஞ்ச் பகுதியில் நாங்களும் அவர்களுடன் துணை நிற்போம் என்று உள்ளூர் மக்கள் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நேரிட்டபோது, பாகிஸ்தானிலிருந்து ஷெல் மற்றும் ட்ரோன் தாக்குதல்களின்போது பலர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீடுகளும் வாழ்வாதாரமாக இருந்த அமைப்புகளும் சேதமடைந்ததால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.