அடுத்த 4-5 நாள்களில் கேரளத்தில் பருவமழை தொடங்கும்: ஐஎம்டி
கேரளத்தில் அடுத்த 4,5 நாள்களில் பருவமழைக்கு வாய்ப்பு..
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை அடுத்த 4,5 நாள்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த 4, 5 நாள்களுக்குள் மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் மே 27ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே கணித்திருந்தது.
எதிர்பார்த்தபடி கேரளத்தில் பருவமழை வந்தால், 2009ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தொடங்கியது போலவே இந்தாண்டும் இருக்கும். என்று ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன.
அடுத்த 4-5 நாள்களில் கேரளத்தில் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த பருவமழையானது ஜூன் 1 ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதிக்குள் பல மாநிலங்களில் பருவமழை பொழியும். இது செப்டம்பர் 17ல் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15ல் முழுமையாக விலகும்.
கடந்தாண்டு மே 30ஆம் தேதியும், 2023ல் ஜூன் 8, 2022ல் மே 29, 2021 ஜூன் 3, 2020 ஜூன் 1, 2019 ஜூன் 8, 2018 மே 29 ஆகிய தேதிகளில் தென் மாநிலத்தில் பருவமழை தொடங்கியது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை 27ஆம் தேதிக்குள்ளும், அதன் பிறகு ஒரு சில நாள்களில் தமிழகத்தில் தொடர்ந்து பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.